Sunday, March 7, 2021

பாரிசில் பைந்தமிழ்த் தொண்டு

   

பேராசிரியர் பெஞ்சமின் 

 

தாயான தமிழன்னையின் திருப்பாதம் பணிந்தேன் ! 

அனைவர்க்கும் கனிவான வணக்கம்  சொல்லி எழுந்தேன்!


"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று பாடினார் எங்கள் புதுவைப்  பாவேந்தர் பாரதிதாசனார். அப்படித் தொண்டு செய்தவர்கள், இப்போதும் தொண்டு செய்பவர்கள்இந்தப் பிரஞ்சு நாட்டிலும் உளர் .அத்தனைப் பேரையும் எடுத்துச் சொல்ல என் ஒரு நாவு போதுமோ ; இன்றொரு நாள்தான் போதுமோ! 


1673 -ஆம் ஆண்டில் புதுச்சேரிப் பகுதியில் காலடி எடுத்து வைத்த பிரஞ்சு இந்தியக் குழுமம் புதுச்சேரிக்கும் பிரான்சுக்கும்  தொடர்பை உண்டாக்கியது.


1962 -இல் பிரெஞ்சுப் பிடியில் இருந்து புதுச்சேரி விடுபட்டாலும் இன்று  வரை அத் தொடர்பு தொடர்கிறது. பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுச்சேரித் தமிழர்கள் பிரான்சின் பல நகரங்களில் குறிப்பாகப் பாரீஸ் அதன் சுற்றுப் புறங்களில் வாழ்கிறார்கள்.


கடல் கடந்து சென்றாலும் உடலோடு பிறந்த தமிழ் உணர்வு ஒருக்காலும் ஒடுங்குவது இல்லை. அதனால் தமிழை மறக்காமல் புறக்கணிக்காமல் வளர்த்து வருகிறார்கள் ; தமிழர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலரை அடையாளம் காணலாம் வாருங்கள்.


யானறிந்த அளவில் முதலில் குறிப்பிட வேண்டியவர் அமரர் திருமிகு லெமூர் வரதன். இவர்தான் அக்காலத்தில் தம் அலுவலக அறையில் தமிழில் வாசகங்கள்  எழுதி வைத்தவர் ; அதன் காரணமாகவே பணி இழந்தவர். அனைவர்க்கும் தமிழ் உணர்வு ஊட்டியவர் ; பலருக்கும் பல விதங்களில் உதவியவர். இன்று அவரை அனைவரும் மறந்துவிட்டார்கள்.


பிறகு உருவான அமைப்புத்தான் ‘பாரிஸ் தமிழ் மாணவர் சங்கம்’. மேல் படிப்புக்காக இங்கு வந்த புதுச்சேரி  மாணவர்கள் ஒன்று கூடி இதனை உருவாக்கினார்கள் .. 1970 ஆம் ஆண்டு பாரீசில்  மூன்றாவது உலகத் தமிழாய்வு மாநாடு நடை பெற்றது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மாண்புமிகு கருணாநிதி அவர்கள் பாரீஸ் வந்திருந்தார்கள்.அவரின் முன்னிலையில் " ‘பாரிஸ் தமிழ் மாணவர் சங்கம்’" என்ற  அமைப்புத் தொடங்கப்பட்டது.  


அதனைத் தொடங்க முன்னின்று முயன்றவர்கள் : திருமிகு பாரிஸ் ஜமால், தசரதன், முடியப்பநாதான், தமிழியக்கன், தெலாமான்ச் ... முதலிய  அக்கால  மாணவர்கள். பின்னர், 1973-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாரிஸ் வந்திருந்த பொழுது, அவருக்காகவே ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  அப்பொழுது, ‘தமிழோசை’ என்ற மாதப்பத்திரிக்கை ‘Roneo’ என்ற பிரதி இயந்திரத்தின் மூலமாக நகல் எடுக்கப்பட்டு சங்கத்தால் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  ஆதலால், அந்த சிறப்புக் கூட்டத்தின் பொழுது, எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒரு தமிழ் தட்டச்சு இயந்திரம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  அதே போல், இரண்டே மாதங்களில், அவரால் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. 


இதன் பின்னர், படிப்படியாக ‘பாரிஸ் தமிழ் மாணவர் சங்கம்’ வளர்ந்து, ‘பிரான்சு தமிழ் சங்கம்’ ஆனது. பிரான்சில் உள்ள அனைத்து இந்திய தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியையும், அவர்களுக்குத் தேவையான அமைப்பு சார்ந்த எல்லா உதவிகளையும் பிரான்சு தமிழ் சங்கம் செய்து வருகிறது. 


பின்னாளில் எம்ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்,

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படங்கள் எல்லாம் பிரான்சில்

பாரிஸில் திரைப்படமாக தயாரித்திட பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் “ஏர்

பிரான்ஸ் கோபால் உள்ளிட்டவர்கள் பேருதவி புரிந்திட்டனர். 


சிவாஜி கணேசனின் நடிப்புத்திறனைச்  சிறப்பிக்கும் வகையில் பிரெஞ்சு அரசின் மிக உயரிய விருதான “செவாலியே’ விருது வழங்கப்படுவதற்குப்  பிரெஞ்சுத் தமிழ்ச் சங்கத்தின் பெரும் முயற்சியே காரணமாகும். 


பிரான்சுத் தமிழ்ச் சங்கம் பாரதியாரின் நூற்றாண்டு விழாவையும் 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவையும் பின்னர் பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழாவையும் பிற தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புடன் கொண்டாடியது.


அன்று முதல் இன்று வரை அதன் தலைவராக இருக்கும் பேராசிரியர் தசரதன் ஆண்டு தோறும் தை (சனவரி)த் திங்களில் பொங்கல் விழா கொண்டாடுவார் ; அதில் கலை நிகழ்ச்சிகள் உரைகள் இடம் பெறும். அண்மையில் பாரதியாரின்  பிறந்த நாள் விழாவை வலையரங்கில் அச்சங்கம் கொண்டாடி மகிழ்ந்தது.


 தமிழ் ஆர்வலர் இன்னொருவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.  1990 -ஆம் ஆண்டு பாரீசில் யான் குடி புகுந்தபோது (அதற்கும் முன்னதாகக்  கிழக்கு ஆப்பிரிக்காவில் ழிபுத்தி என்ற நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்) , சார்சல் என்ற ஊரில் திருமிகு மு.கருணாநிதி என்பவர் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்திக்கொண்டு இருந்தார். இவர் பிரெஞ்சுப் படையில் பணியற்றி ஓய்வு பெற்றவர். பெரியாரின் 'பக்தர்' ; சிறந்த தமிழ்ப் பற்றாளர். இவர் நடத்திய நிகழ்ச்சியில் நடனங்கள் இடம் பெறும். 1992 -ஆம் ஆண்டு முதல் இவர் நிகழ்ச்சிகள் நடத்தித் தரும் பொறுப்பை அடியேன் வசம் இவர் ஒப்படைத்தார். 


அப்பணியை ஏற்ற பின் பல்லாண்டுகள் அவர் நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுத்தேன். அப்போது எல்லாம் தமிழில் நிகழ்ச்சிகள் நடைபெறாக்  காலம். முழுக்க முழுக்கத் தனித்தமிழில் செந்தமிழில் நிகழ்சிகளைத் தொகுத்  தந்ததை மக்கள்  போற்றி வரவேற்றனர். நிகழ்ச்சிகளின் பொது வெறும் அறிவிப்போடு நிற்காமல் நடனங்கள் பற்றிய விளக்கங்கள் , குறிப்புகளைக் கூறி வந்தேன். இடை இடையே தமிழைப் பற்றியும் தமிழின் சிறப்புகளைப்  பற்றியும் கூறியது நல்ல பயன் தந்தது ; ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது 'bonjour',   'comment ça  va ' என்று பேசி வந்த தமிழர்கள் என் தூண்டுதலால் 'வணக்கம் ', 'நலமா ?' என்று பேசத்  தொடங்கினார்கள்.


நண்பர் கருணாநிதி சர்சல் நகரில் சனிக்கிழமை தோறும் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியும் மேற்கொண்டு இருந்தார் . இப்பணியில் திருமதி கருணாநிதியும் உதவி  செய்தார். பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற புதுவை  மக்களின் வீடுகளை  அரசியல்வாதிகளின் வாரிசுகள் கொள்ளை இட்டுக்கொண்டிருந்தனர். அதனைத் தடுக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து வெற்றி  பெற்றார் திரு கருணாநிதி. இப்படிப் பல பணிகளைச்செய்த அவர் புதுவையில்  குடியேற முடிவு செய்தார். 


தமிழ் நிகழ்ச்சிகளையும் பள்ளியையும் யாரிடமாவது ஒப்படைக்க முயன்றார்.அடியேனிடமும் கேட்டார் ; அப்போது பன்னாட்டு  நிறுவனத்தில் பொறுப்பான பதவியில்   இருந்ததால்  நேரம் ஒதுக்க முடியாமல் போனது.

  வேறு யாரும் முன் வராமையால் அவர் யாவற்றையும் மூடிவிட்டுப்  புதுவை சென்றுவிட்டார். அவர் ஆற்றிய பணியினை மறக்கவும் முடியாது ; மறுக்கவும் இயலாது.


அவ்வப்போது ஆங்காங்கே ஒரு சிலர் மன்றம், கழகம் என நிறுவினர் ; அவற்றுள் ஒன்று திருமிகு கோவிந்தசாமி செயராமன் நிறுவிய 'முத்தத்தமிழ் சங்கம் '. முனைவர் ஒளவை நடராசன் என்ற தமிழ் அறிஞர் இவருக்கு'அடியார்க்கன்பன் ' என்ற விருதை வழங்கி இருக்கிறார்.  இவர் முத்தமிழ்ச்  சங்கத்தின் சார்பாகத் 'தமிழ் வாணி ' என்ற தாளிகையையும் (பத்திரிகை) நடத்தி வந்தவர். 


பல கழகங்கள், மன்றங்களோடு தொடர்பு உடைய இத் தமிழ் ஆர்வலர்   ஆற்றிய தமிழ்ப்  பணிகள் பல : ஆண்டு தோறும் இலக்கிய  விழா நடத்துவார் ; பிரான்சு கம்பன் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து பல்லாண்டுகள் அதன் செயலராகப் பணியாற்றியவர் ; பேராசியர் பெஞ்சமின் இலெபோ அவ்ரகளோடு இணைந்து 'இலக்கியக் கூடல் ' என்ற அமைப்பினை உருவாக்கியவரும் இவரே.  அப்பெயர்  பிறகு 'இலக்கியத்தேடல்' என்று மாற்றப்பட்டது. பிரான்சு நாட்டின் பெரும் புலவர் அமரர் கண்.கபிலனார் அவர்கள் இவரைப் பாட்டுடைத்த தலைவனாக்கி  அந்தாதி நூல் ஒன்று இயற்றி  இருக்கிறார்.


முத்தமிழ்ச் சங்கம்-தமிழ்வாணி பிரான்சு சார்பாக 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று மகாகவி பாரதியாரின் 125 வது ஆண்டு விழா பாரீசு மாநகரில் Maison de l'Inde, 7R boulevard Jourdon 75014 Paris என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப்  புதுவைப் புரட்சி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் மற்றும் இசைக் கலைஞர் காரை இளையபெருமாளும் வருகை தந்திருந்தனர்.


2008-ஆம் ஆண்டு மீ திங்கள் 8-ஆம் நாளில் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கம் இலக்கிய விழாவைத் தமிழ்த்  தாத்தா  நினைவு நாளாகக் கொண்டாடியது. புதுச்சேரிப் பழம் பெரும் இயலிசைப் புலவரான செவாலியே இரா வெங்கடேசனார்  2009 –ஆம்   ஆண்டு விழாவுக்கு முத்தமிச் சங்கத்தின் விழவுக்குத் தலைமை தாங்கியது மறக்க இயலா நிகழ்வாகும்


முத்தமிழ் விழா 10 ஆம் ஆண்டு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . 2012 -ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய உலகத்த தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்தார் அடியார்க்கன்பன்  கோவிந்தசாமி. சின்னப்ப பாரதி, மலேசிய எழுத்தாளர்கள், கலை விமரிசகர் இந்திரன் ...எனப் பலரும் கலந்துகொண்டனர். திருக்குறளை ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் மொழிகளில் IPA (international Phonetic Alphabet)  ஒலிக் குறிப்புடன் வெளியிட உழைத்துக்கொண்டு இருக்கிறார். அடியார்க்கன்பன்  கோவிந்தசாமி. பிரான்சில் இருக்கும் 'Académie Française'  போலத் தமிழுக்கும் அமைக்க வேண்டும் என்பதே இவரின் வாழ்நாள் இலக்காகும்.


அடுத்து குறிப்பிட வேண்டிய கழகம் : பிரான்சுக் கம்பன் கழகம். ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் கம்பனுக்குக் கொடி நாட்டியவர் கவிஞர் கி பாரதிதாசன் ; மரபுக் கவிதை பாடுவதில் இவர் வல்லவர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரான திரு ஆலன் ஆனந்தன், முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி, பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ ... முதலியோர் தோள்  கொடுக்கக் கம்பன் கழகம் விரைந்து வளர்ந்தது. ஆண்டு தோறும் கம்பன்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


தமிழகம், புதுச்சேரியில்  இருந்து கம்பன் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டனர் ; கம்பன் கச்சேரி களைட்டியது. புதுச்சேரிக் கம்பன் கழகத் தலைவர் அமரர் கோவிந்தசாமி ஐயா அவர்கள், அக் கம்பன் கழக்ச் செயலர் அமரர் வக்கீல் முருகேசன் ஐயா அவர்கள், சுகி சிவம், ருக்குமணி அம்மாள், பேராசிரியர் அறிவொளி, நகைச்சுவைத் தென்றல் இரா சண்முக வடிவேல், சென்னை உயர்நநீதி மன்றத்தின்  நீதியரசர் தாவீது அன்னுசாமி, நீலகண்டன், திருநாவுக்கரசு,   புதுவைப்  பாவலர்மணி சித்தன் தமிழருவி மணியன், பேராசிரியர் சத்தியசீலன், இலக்கியச் சுடர் இராமலிங்கம், இ சுந்தரம், மண்ணின் மைந்தர் முத்தையா, பேராசியர் பர்வீன் சுல்தானா....போன்ற  பெருமக்கள் பிரான்சுக் கம்பன் மேடையை அலங்கரித்தனர். 


பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் கம்பன் முற்றோதல்  மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று நிறைவுற்றது. பின்னர்த்  திருக்குறள் முற்றோதல் தொடங்கியது. கமபன் விழா மட்டும் அல்லாமல் ஆண்டுதோறும் பொங்கல் விழா, மகளிர் விழா, இலக்கிய விழா, நூற்றாண்டு விழா எனப் பல விழாக்களைக் கம்ப கழகம் கொண்டாடியது. என் பேராசிரியர் முனைவர் முவ, பேராசிரியர் இலக்குவனார், புதுமைப்  பித்தன் , என் எஸ் கிருட்டிணன, பகத் சிங், புதுச்சேரி பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வ சுப்பையா... போன்றோரின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தது கம்பன் கழகம். 

இப்படிப் பிரான்சின் தலை சிறந்த கழகமாக அது விளங்க உறுப்பினர்கள் பெரிதும் உழைத்தனர் .அதன் விளைவாக மகளிர் அணி தோன்றியது ; பின்னர் இளைஞர் அணியும் அணிவகுத்தது. வீறு நடை போட்டு வந்த நிலையில் அதன் தலைவர் முதலில் இளைஞர் அணியை நீக்கினார் ; பின்னர் மகளிர் அணியை மூடினார் ! ஒன்றிரண்டு  ஆண்டுகளில் கம்பன் கழகப் பழம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர் ; இளையவர் கைக்கு மாற்றுகிறேன் என்று கம்பனைப் பற்றி ஒன்றும் அறியாத தம் மகளையே தலைவர் ஆக்கினார். கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.


கவிஞர் பாரதிதாசன் இங்குள்ளோருக்கு யாப்பிலக்கணம் சொல்லிக்கொடுத்துப் பலருக்கும்  பாவலர் பட்டம் வழங்கி வருகிறார்.இணையதளத்திலும் பாவலர்   பயிலரங்கு நடத்தி வருகிறார்.


அடுத்துத்  தொடர்வது அத்திசு மோன்ஸ் என்ற நகரில் உதயமான 'ALACFIAM'

( ASSOCIATION DE LITTERATURE DES ARTS ET CULTURE FRANCO-INDIENNE D'ATHIS-MONS). இதனை உருவாக்கி வளத்தவர் புலவர் பொன்னரசு. தம் இயற்பெயரான கனகராசு என்ற பெயரைத் தமிழ்ப் பற்றுக் காரணமாகப் பொன்னரசு என்று மாற்றிக்கொண்டவர் ; சிறந்த பேச்சாளர். ஆண்டு தோறும் பொங்கல் விழா நடத்திக் கலை விழா எடுப்பவர். பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தூண்டுதலின் பேரில் ஒவ்வோர் ஆண்டும் சிலப்பதிகார விழா எடுத்து நடத்தி இங்குப் பல கழகங்களுக்கு  அறிவுரை வழங்குபவராகவும் இவர விளங்குகிறார்.  


அடியார்க்கன்பன்  கோவிந்தசாமி இலக்கியக் கூடல் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார் ; அதன் முதல் கூட்டம் திரு ஆலன் ஆனந்தன் இல்லத்தில் நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கியவர் ஸ்டராஸ்பூர்க் நகரில்  வணிகராக விளங்கும் திரு நாகரத்தின கிரூட்டிணா. இவர் பிரஞ்சு 

இலக்கியங்களைத் தமிழிலும்   தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் பிரெஞ்சிலும் மொழி பெயர்ப்பவர். கவிஞர், சிறந்த சிறுகதை, நாவலாசிரியர் ; இவருடைய நீலக் கடல் என்ற நூலுக்குத் தமிழக அரசு பரிசு வழங்கியது. தமிழகப் படைப்பாளிகளான பாவண்ணன் (பாசுகரன்), இரா முருகன் ...போன்றோரின் நண்பர் . (இவர்கள் இருவரும் என் மாணவர்கள்!).

 முதல் கூட்டத்தில் பின் நவீனத்துவம் பற்றி விளக்கிப் பேசினார். அடுத்த கூட்டத்துக்கு நண்பர் பிரபஞ்சன் தலைமை தாங்கினானர் . (இவர்  என் வகுப்பு தோழர் ; அப்போது இவர் பெயர் வைத்தியலிங்கம்) .


திரு நாகரத்தின கிருட்டிணா. அழைப்பின் பேரில் இலக்கியக் கூடல் உறுப்பினர்கள் ஸ்டராஸ்பூர்க் நகருக்குச் சென்று அங்கே இலக்கிய நிகழ்ச்சி, சிலப்பதிகாரப் பட்டிமன்றம் ஆகியவற்றைப் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடத்திக்கொடுத்தோம்.


அதன் பின்னர் இலக்கியக் கூடல் இலக்கியத்தேடல் என்று பெயர் மாற்றம் பெற்றது . பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அதன் பொறுப்பை ஏற்றார். இதுவரை இந்த அமைப்பில் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இந்தக் கூட்டம் ஒன்றில் தமிழே உலகின் தாய் மொழி என்ற தலைப்பில் ஆராய்ச்சி அறிஞர் ம.சொ விக்டர் உரை ஆற்றினார்  ; 'தமிழ் எழத்துச் சீர் திருத்தமா ! தமிழுக்கது பொருத்தமா? ' என்ற தலைப்பில்  பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ பேசினார். அண்மையில் பேராசிரியர் தளிஞ்சன் முருகையன் 'சுந்தர காண்டத்தின் மந்திரச் செய்யுள்கள்' என்ற தலைப்பிலும் திரு புதுவை  இரா வேலு 'குற்றாலக் குற வஞ்சி  - வற்றாக் கவியருவி' என்ற பொருளில் உரை நிகழ்த்தினார்கள் ; வழக்குரைஞர் குணசேகரன் பாவேந்தர் பாக்களின் சிறப்புகளை  எடுத்துரைத்தார். இலக்கியயத்தேடல், தமிழ் மேடை என்ற புலனக்  குழுக்கள் உருவாக்கப் பட்டன ; தமிழ் இலக்கணம், இலக்கியம் பற்றிய ஐயங்களும் அவை தொடர்பான செய்திகளுக்கும் தமிழ் மேடை இடம் தரு. ; இலக்கியம் தொடர்பான கட்டுரைகளுக்கு இலக்கியயத்தேடல் இடம் தரும். இலக்கியத்தேடலில் ஆசிரியர் சின்னப்பா M.A, B.Ed குறுந்தொகை பற்றித் தொடர் கட்டுரை எழுதி வந்தார்.


பிரான்சு வொரெயால் தமிழ்க்  கலாச்சார மன்றம் என்ற தமிழ் அமைப்பு பாரீஸ் புற  நகராம்  வொரெயால் என்ற ஊரில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் தலைவர் திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்.ஆண்டு தோறும் கலை நிழ்ச்சிகள்  உரைகள் ... முதலியவற்றை இம்மன்றம் நடத்தி வருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் . திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன் முயற்சியால் அந்த நகரில் தெரு ஒன்றுக்குக் காந்தி பெயர் சூட்டப்பட்டு அங்குள்ள சதுக்கத்தில் காந்தி சிலை நிறுவப்பட்டது. கொரோனா காலத்தில் இம்மன்றம் சில வலைதளக் கருத்தரங்குகளை  நடத்தி வருகிறது.


காரைக்கால்   திருமலை  இராயன் பட்டினத்தைச் சேர்ந்த அமரர் கண கபிலனார் என்ற புனை  பெயர் பூண்ட நாகராசன்  என்பவர் இங்கேயே பல்லாண்டுகள் வாழ்ந்தவர் ; கவி புனையும் ஆற்றல் மிக்கவர் ; பல துறை அறிஞர்; தள்ளாத வயது ஆனாலும் தமிழைத் தள்ளாதவர் ; பலருக்கும் வழிகாட்டி வந்தவர் ; 'கர்த்தர் காவியம்'என்ற அருமையான காவிய  நூலை இயற்றிவர். இயேசு பெருமான் வரலாற்றைக் கூறும் நூல் இது : 80 பக்கமே உள்ள இதற்குப் பல பக்க ஆராய்ச்சி முன்னுரை அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. நேரு காவியம் எழுதி முடித்த நிலையில் அச்சேறாமல் போய்விட்டது.நடக்க முடியா நிலையிலும் எல்லாத் தமிழ் விழாக்களிலும் தவறாமல் கலந்துகொண்டு கவி பாடும் இயல்பினர். இவர் மறைவு எங்களுக்குப் பேரிழப்பு!


சண்முகசுந்தரம் என்னும் ஆராய்ச்சி அறிஞர் பிரஞ்சுக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்  ; தமிழே பிற மொசுழிகளுக்குத் தாய் மொழி என்று தம் ஆராய்ச்சி வழி நிறுவி இருக்கும் இவர் தமிழ் கற்பிக்கும் முறைகளைப் பிரஞ்சு மொழியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். பிரஞ்சு அரசில் பணியாற்றி வரும் கோபாலகிருட்டிணன்' பட்டினப் பாலையை'ப் பிரஞ்சு மொழியில் தந்திருக்கிறார்.


அண்ணாமலைப் பல்கலைக்  கழகத்தின் முகவராகச் செயல் பட்டுக்  கல்வி நிறுவனம்  பாரீசில் நிறுவி நடத்தி வந்தவர் முனைவர் சச்சிதானந்தம் ஈழத் தமிழர். அப்பல்கலைக்கழத்தைத் தமிழக அரசு எடுத்துக்கொண்ட நிலையில் அவர் நிறுவனம் பெயர் மாற்றம் பெற்று உயர் கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக இதுவரை பன்னாட்டு மாநாடுகள் மூன்று நடத்தப்பட்டு உள்ளன.

திரு சம்பத் என்பவர் தமிழில் தாளிகை ஒன்றை நடத்தி வந்தார் ; பிறகு இவர் லியோன் நகருக்குக்  குடி புகுந்துவிட்டார்.அங்கே  தமிழ்ப் பணி  ஆற்றி வருகிறார். அந்த நகரில் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பணி  புரிந்த திருமிகு ழான் மரி என்பவர் தலைமையில் ஈழத் தமிழர்கள் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்கள்: பின்னர் பிரான்சில் தமிழ்ச் சோலை என்னும் பொதுப்பெயரில் ஏறத்தாழ 50 தமிழ்ப் பள்ளிகள் 3,000 மாணவர்களுடன் இயங்குகின்றன. ஈழத்துத்  தமிழர்கள் தாய் மொழிப பற்றோடு தம் பிள்ளகளை  இப்பள்ளிகளுக்கு அனுப்பித்த தமிழைக் கற்க வைக்கிறார்கள். அவர்களின் தமிழை வளர்க்க ஈழத்துத்  தமிழர்கள் அரும்பாடு பட்டு வருகிறார்கள்.

இறுதியாகச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.. 1981 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சு வாழ் தமிழர்களுக்காக என்றே கத்தோலிக்க ஞானகம் ஒன்று இயங்கி வருகிறது. புதுச்சேரிப் பேராயரும் தமிழக ஆயர்கள் பேரவையும் தேர்ந்தனுப்பும் கத்தோலிக்கக்  குரு ஒருவர் ஞானகத்தை வழி நடத்துகிறார். எல்லா வழிபாடுகளும் திருவிழாக்களும் முழுக்க முழுக்கத் தமிழில் நடைபெறும். ஆண்டு தோறும்  ஞானக விழா தமிழில்  கொண்டாடப்படுகிறது. திருமறை தொடர்பான உரை நிகழ்ச்சிகள் , பட்டி மன்றங்கள், தியானங்கள், சுற்றுலாப் பயணங்கள் ... நடைபெறுவது உண்டு.


பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை 'தமிழ் எழுத்துச் சீர் திருத்தமா! தமிழுக்கது பொருத்தமா?' ஏற்கப்பட்டு கோவையில்  2010 -இல் நடைபெற்ற 'செம்மொழி மாநாட்டுக்கு' அவரை  அழைத்துப் பெருமை படுத்தியது தமிழக அரசு . பின் 2018 ஆம் ஆண்டு அயலகத்  தமிழ் அறிஞர் இலக்கண விருதை நூறாயிரம் உரூபா பொற்கிழியுடன் தமிழக அரசு  அளித்து மகிழ்ந்தது. இவ்விருதைப் பிரான்சுக் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசனும் கம்பன் கழக கவிஞருமான திருமதி அருணா செல்வமும் பெற்றிருக்கிறார்கள்.  பிரான்சுக் கம்பன் கழகத்துக்கு மூன்று விருதுகள் .


இப்படியாக இங்குள்ள தமிழர்களாகிய நாங்கள் தமிழை வளர்க்கிறோம் ; எங்கள் இளையத்தலை முறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கிறோம்.


இவற்றை இனக்குக் கூற வாய்ப்பு அளித்த காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் 

இந்த உரைக்குத்  தேவையான செய்திகளை வழங்கி உதவிய அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. இவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் பாரீசில் பணியாற்றி வருபவர்.


வணக்கம்!











 






 










 










No comments :

Post a Comment