Thursday, February 25, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம் எதிர்வரும் 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று நடுவர் தீர்ப்புரைப்பார். இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி முத்துப்பட்டணம் நா. வீர குடும்பத்தாரும் கம்பன் அன்பர் ஒருவரும் கொடை தந்து உதவியுள்ளனர். அனைவரும் வருக. எப்போதும் போல் சிற்றுண்டி உண்டு.




Wednesday, February 10, 2016

"தமிழ் இசையின் நுட்பங்களை நிலைக்கச் செய்தவர் கம்பர்'




தமிழ் இசை நுட்பங்களை தனது காப்பியத்தில் புகுத்தி, அந்த இசையை கால காலத்திற்கும் நிலைக்கச் செய்தவர் கம்பர் என முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் பேசினார்.
காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் மீனாட்சி- பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கம்பனில் இசைத்தமிழ் என்ற தலைப்பில் பத்மநாபன் பேசியது: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் கற்றுச் சிறந்தவர் கம்பர். தொல்காப்பியர் கூறிய பல்வேறு வண்ணங்களையும் தமது பாடல்களில் அமைத்து இசைத்தவர் கம்பர்.
அவரது காலத்தில் யாழுக்கு அடுத்த நிலையில் வீணை சிறப்பிடம் பெற்றிருக்கிறது. அக்காலத்துத் தமிழ் இசையின் நுட்பங்களை தனது காப்பியத்துள் இட்டுக் காலகாலத்திற்கும் நிலைக்கச் செய்த இசைப்பேரறிஞர் கம்பர். இயல்பாக அறியப்பெற்ற கம்பரை இசையோடு பாடிப்பழகினால் அவரது கவித்துவமும், புலமைத்திறமும் இன்னும் சிறப்பாக புலப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா தலைமை வகித்துப் பேசுகையில், இசையோடு தமிழைப் பாடுகிறபோது தான் அதன் உணர்வைச் சிறப்பாக அனுபவிக்க முடியும். திருக்குறளையும் திருமுறையையும் பாடுவதைப்போல் கம்பர் கவியையும் இசையோடு பாடி முத்தமிழின் தரத்தை நடைமுறைப்படுத்துவது நமது கடமை என்றார்.
முன்னதாக கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் வரவேற்றுப் பேசுகையில், கம்பரின் காவியத்துள் இடம்பெறும் இசை நுணுக்கங்களைப் பேசுவதோடு அவற்றை ஆவணப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை ஓஷியானிக் எம். எஸ். மெய்யப்பன், கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, திரைப்பட இயக்குநர் காரைக்குடி நாரயணன், பேராசிரியர்கள் சே.செந்தமிழ்ப்பாவை, மு.பழனியப்பன், மா. சிதம்பரம், நா.மீனவன், இராஜபாளையம், அறந்தாங்கி, தஞ்சாவூர் கம்பன் கழகத்தார் கலந்து கொண்டனர். கம்பன் கழக துணைச்செயலர் சொ. சேதுபதி நன்றி கூறினார்.

நன்றி- தினமணி நாளிதழ்

Monday, February 1, 2016

காரைக்குடி கம்பன் கழக இலக்கியப் போட்டிகள் - முடிவுகள்

          கம்பன் கழகம், காரைக்குடி                           




                     செய்தி அறிக்கை      நாள்: 1-2-2016

                வணக்கம். நேற்றைய தினம் 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்து கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. அது பற்றிய கீழ்க்காணும் செய்தியினை தங்கள் மேலான செய்தித் தாளில் வெளியிட்டு வெற்றி பெற்ற கல்லூரி , பள்ளி மாணாக்கர்கள் பரிசுகளை நேரில் வந்து பெற்றுச் செல்வதற்கு உதவிடுமாறு மிக்க பணிவன்புடன்  வேண்டுகின்றோம்.

                28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்று, கீழ்க்கண்டவர்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.

                கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு ஷாஜஹான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (ரு 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (ரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இரா. நாச்சாள் திருக்குறளில் முதற் பரிசினையும்  (ரூ 3500), கம்பராமாயணத்தில் இரண்டாம் பரிசினையும் (ரூ1000) வென்றார்.

                ஊக்கப் பரிசுகளை ( தலா ரூ750) பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பத்மாராகவி, கைக்குறிச்சி பாரதி கலைக் கல்லூரி சு.சுந்தரவள்ளி, ம.கௌசல்யா, பெங்களூரு ஐ.ஐ.எஸ் திருமூலநாதன், கிருஷ்ணன்கோவில் வி பி எம் எம் மகளிர் கல்லூரி க.வைரமணி ஆகிய  ஆறு பேர்களும் பெற்றனர்.

                பள்ளிகளுக்கான  கம்பராமாயண ஒப்பித்தல் போட்டியில் காரைக்குடி கலைவாணி பள்ளி ம.பானுப்பிரியா, தேவகோட்டை முருகானந்தா நடுநிலைப்பள்ளி சு.அருண்குமார் இருவரும் இரு முதற்பரிசுகளையும் (தலாரூ 1,000),

                தேவகோட்டை புனிதஜான் பள்ளி த.மகாலெட்சுமி, திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மு.மீனாம்பாள், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி சுப. கோமதி, ,காரைக்குடி கலைவாணி பள்ளி ம.சண்முகப்பிரியா, ஸ்டெனிஸ் செரின், க.சுபலெட்சுமி, பீ.ஜோசி அபர்ணா, சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி பள்ளி த.ஹரிணி, புதுவயல் வித்யாகிரி பள்ளி வெ.சௌந்தர்யதர்ஷினி, கோ.அபிராமி, கூத்தலூர் புனித செபஸ்தியார் பள்ளி ஜ.கோகிலவாணி, காரைக்குடி ஆசாத் பள்ளி செ.கலைமணி,ஆகிய  பன்னிரண்டு பேர்களும்  இரண்டாம் பரிசுகளையும் (தலா ரூ 250),

                கீழச்செவல்பட்டி மீ சு பள்ளி மா.ஜெகன், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி பி மதிவதனி, தேவகோட்டை புனிதஜான் பள்ளி அ.தனலெட்சுமி, கானாடுகாத்தான் மு சித மு சிதம்பரம் செட்டியார் பள்ளி ரா.மணிகண்டன், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மா. சத்யா, சிங்கம்புணரி,அன்னை வேளாங்கண்ணி பள்ளி சு.சிநேகவர்ஷினி ஆகிய ஆறு பேர்களும் ஊக்கப் பரிசுகளையும் பெற்றனர்.

                                                                                                 கல்லூரிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு.ராஜாராம், சே செந்தமிழ்ப்பாவை, இராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர்கள் செ.நாகநாதன், இரா.கீதா, குழிபிறை முனைவர் வீ,கே. கஸ்தூரிநாதன், பேராசிரியர் பா தட்சிணாமூர்த்தி ஆகியோரும் பள்ளிகளுக்கு பொன்னமராவதி நல்லாசிரியர் நா திருநாவுக்கரசு, திருப்புத்தூர் சி உஷா, அழகர்கோவில் ஆ.பழனியாயி, மதுரை சு.தொண்டியம்மாள் ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றி பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுத்து உதவினர்.

                                                        
                 பரிசுகள் மார்ச் மாதம் 21 ஆம் நாள் திங்கள்கிழமை மாலை  காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன் திருவிழாவின் முதல் நாளில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பெறும்.

                  தாங்கள் இதுகாறும் எங்கள் பணிகளில்  காட்டி வந்த உதவிக்கும் ஊக்கத்திற்கும், எங்கள் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் புலப்படுத்திக் கொள்ளுவதோடு, இனியும் தொடர்ந்து இத்தகு உதவியை தொடர்ந்து நல்கவும்  அன்புடன் வேண்டிக் கொள்ளுகின்றோம்.



                                                      பழ பழனியப்பன்
                                                செயலாளன், கம்பன் கழகம்

                                                   கைபேசி: 94450 22137