Saturday, May 14, 2016

பொருந்துறப் புல்லுக....... அந்தமான் அனுபவம்

பொருந்துறப் புல்லுக.......
கம்பனின் இந்தவரிகளின் அடர்த்தியையும் ஆழத்தையும் அந்தமான் இலக்கிய மன்றமும் காரைக்குடி கம்பன் கழகமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் காணமுடிந்தது.
ஏழிரண்டாண்டு கானகம் ஏகி,கடுந்துயர் அடைந்து,அதர்மத்தை அழித்து பின்,அரியணையில் அமர்கிறான் இராமன். மங்கலகீதம் ஒலிக்க,வேதியர் ஆசி கூற ,சங்கும் முரசும் இன்னும் பல இசைக்கருவிகளும் முழங்க,இந்திரனுக்கு இணையான இராமன் அரசுக்கட்டிலில் வீற்றிருக்கிறான்.
மந்திரக் கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்த
தந்திரத் தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ
சிந்துரப் பவளச் செவ்வாய்த் தெரிவையர் பல்லாண்டு கூற
இந்திரற்கு உவமை எய்ய எம்பிரான் இருந்த காலை (10,338)
மறையவர்களுக்கு மணியும் முத்தும்,பொன்னும், பசுமாடுகளும்,,விளைநிலங்களையும்,தானமாகக் கொடுத்தான்.பிறகு, இரந்தவர்கள் விரும்புமாறு எல்லாம் கொடுத்தான்.எல்லோருக்கும் பரிசு வழங்கிய இராமனின் பார்வை அனுமனிடம் திரும்புகிறது. இவன் செய்யாமல் செய்த உதவிக்கு,காலத்தால் செய்த நன்மைக்கு நாம் ஏதாவது செய்தாகவேண்டுமே என்று எண்ணுகிறான்.ஆகவே அனுமனை அன்போடு இனிதாக நோக்கி, நீ அல்லாமல் வேறு எவரும் நீ செய்த உதவியைச் செய்ய முடியுமா?அல்லது,நீ செய்த பெரிய உதவிக்கு யான் கைம்மாறு செய்வது எங்ஙனம்?ஆகவே,போர் செய்து உதவிய உன் வலிய தோள்களால் என்னைத் தழுவிக் கொள்க என்றான் இராமன்.,
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்தினிது அருளின் நோக்கி
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலாலன்று செய்த
பேருதவிக்கு யான் செய் செயல் பிறிதில்லை பைம்பூண்
போருதவிய திண்தோளாய் பொருந்துறப் புல்லுக என்றான். (10,351)
தழுவுகிறவன் உயர்ந்தவன்-தழுவப்படுகிறவன் இளையவன் அல்லது சிறியவன் என்பது உலகியல் நினைப்பு. இங்கு, தழுவும் மாருதி உயர்ந்தவனாகவும்,தழுவப்படும் இராமன் சிறியவனாகவும் மதிக்கப்படும் என்பதால்,இராமன் இவ்வாறு கூறினான் என்பர் அறிஞர் பெருமக்கள். கம்பன் காட்டிய இந்தக் காட்சி,அந்தமான் கருத்தரங்கில் அரங்கேறியது. ஆம்,கருத்தரங்கை ஒழுங்கு செய்யும் பெரும்பொறுப்பை உற்ற தன் தோழர்களோடும், தம்துணவியாரோடும் ஏற்று சிறப்புறச் செய்து காட்டிய திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை ,கம்பன் அடிசூடி,அய்யா பழ.பழனியப்பன் அவர்கள், இத்தகு சீர்மிகுக் கருத்தரங்கை வெற்றியுடன் நடத்தும் கிருஷ்ணமூர்த்தியே என்னைப் பொருந்துறப் புல்லுக என்ற கம்பனின் வரிகளைச் சொல்லியபடி அக்கணமே அவரைத் தழுவிக்கொண்டார். உணர்ச்சிமயமான இக்காட்சியை சுவைஞர்கள் மட்டுமல்லாமல்,அரங்கின் நடுவிலே அனுமனும் கம்பனும் கூட கண்டிருக்கக் கூடும்.
கண்டவர்:மா.உலகநாதன்,முனைவர் பட்ட ஆய்வாளர்,திருநீலக்குடிஅலைப்பேசி: 9442902334

No comments :

Post a Comment